மின்சார ரயிலில் போஸ்டர் ஒட்டிய இளைஞர் கைது... ரூ. 1,36,800 அபராதம்
மும்பை: மின்சார ரயிலில் சட்டவிரோதமாக விளம்பர போஸ்டர் ஒட்டிய இளைஞருக்கு, ரயில்வே நீதிமன்றம் ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
மும்பையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் மின்சார ரயில்களில் சட்டவிரோதமாக விளம்பர போஸ்டர்கள் ஒட்டுபவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் மெயின் மற்றும் துறைமுக வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சட்டவிரோதமாக விளம்பர போஸ்டர்களை ஒட்டியதாக சயான் கிழக்கு பகுதியை சேர்ந்த விஜய் திவாரி (22) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 114 போஸ்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட விஜய் திவாரியை ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் திவாரிக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 800 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் 7 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
சிறை தண்டனைக்கு பதில் தனக்கு விதித்த அபராத தொகையை விஜய் திவாரி நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இதேபோல், நேற்று முன்தினமும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டியதாக பங்கஜ் பால் என்ற இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு, ரூ.24 ஆயிரத்து 700 அபராதம் விதித்து ரயில்வே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சட்டவிரோத விளம்பர போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் 377 வழக்குகள் பதிவு செய்தனர். இதன் மூலம் 2 லட்சத்து 94 ஆயிரம் அபராதம் வசூலானது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications