மிஸ்டர் மோடி! வாரணாசியை டோக்கியா மாதிரி மாற்றுவேன்னு சொன்னீங்களே.. கேட்பது முரளி மனோகர் ஜோஷி!
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மிகக் கடுமையாக தாக்கி விமர்சித்த சில நாட்களுக்குள் மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முரளிமனோகர் ஜோஷியும் விமர்சித்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கும் இவர் அண்மையில் நரேந்திர மோடி அரசு விளம்பரத்துக்காக செயல்படுகிறது; மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் இலக்கே இல்லாதவை என சாடியிருந்தார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியும் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முரளி மனோகர் ஜோஷி பேசியதாவது:
வாரணாசியை ஜப்பானின் டோக்கியோ போல் மாற்றுவதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். வாரணாசியை மேம்படுத்துவதை நான் எதிர்க்கவில்லை. அதற்கு முன்னதாக இங்கே அடிப்படை வசதிகளை முதலில் செய்ய வேண்டும்.
இந்த வாரணாசி நகர் குப்பைகள் நிறைந்த இடமாகவே நீடிக்கவா நாம் விரும்புகிறோம்? புல்லட் ரயில்களை இயக்குவதை நான் எதிர்க்கவில்லை.. அதற்கு முன்னதாக அடிப்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு முரளிமனோகர் ஜோஷி பேசினார்.
வாரணாசி லோக்சபா தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் முரளி மனோகர் ஜோஷி. கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டதால் வேறுவழியே இல்லாமல் விருப்பமே இல்லாமல் கான்பூர் லோக்சபா தொகுதிக்கு மாறினார் ஜோஷி. அத்துடன் பாரதிய ஜனதாவில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் ஜோஷி என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications