லிங்காயத்துகள் விவகாரம்... அமித்ஷாவுக்கு 'செம நோஸ் கட்' கொடுத்த முருகா மடம்!
லிங்காயத்துகள் விவகாரத்தில் முருகா மடாதிபதியிடம் அமித்ஷா வாங்கிக் கட்டியுள்ளார்.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். தற்போது லிங்காயத்துகள் விவகாரத்தில் அமித்ஷாவுக்கு முருகா மடாதிபதி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல- தனியான சிறுபான்மை மதம் என்ற கோரிக்கையை கர்நாடகா காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பித்ததுடன் மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
கர்நாடகா ஆளும் காங்கிரஸின் இந்த அதிரடியால் பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத்துகள் கணிசமாக காங்கிரஸை ஆதரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பதறிக் கொண்டிருக்கும் பாஜக லிங்காயத்து தனி மதம் என்பதை ஏற்காத பிரிவினருடன் கை கோர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகாவின் முருகா மடாதிபதியை அமித்ஷா இது தொடர்பாக சந்தித்து பேசினார். ஆனால் முருகா மடாதிபதி சிவமூர்த்தி முருகராஜேந்திர சுவாமிஜி அமித்ஷாவுக்கு செம நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.
அமித்ஷாவிடம் மனு ஒன்றை அளித்த மடாதிபதி, லிங்காயத்துகள் தனி மதம் என்பதை மத்திய அரசும் அங்கீகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசின் நடவடிக்கை சரியானது. நீங்கள் குறிப்பிடுவது போல இந்துக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை அல்ல இது. இந்துக்களை ஒன்றிணைக்கக் கூடியதுதான் இது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முருகா மடமானது மதச்சார்பற்ற கொள்கையைக் கடைபிடிக்கிறது. எந்த ஒரு அரசியல் கட்சியையும் நாங்கள் ஆத்ரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. அதாவது பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அமித்ஷாவின் முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டது. இதனால் மடத்தை விட்டு வெளியே வந்த அமித்ஷா உள்ளிட்டோர் முகம் வெளிறிப் போய் கிடந்தது.