பாஜகவில் இணைந்த எம்.ஜே. அக்பர் கொடும்பாவியை எரித்த குஜராத் இஸ்லாமியர் தலைவர்கள்!
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியில் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அவரது கொடும்பாவியை எரித்தனர்.
மூத்த பத்திரிகையாளரான எம்.ஜே. அக்பர், 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அத்துடன் பீகாரில் இருந்து எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அத்துடன், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் நரேந்திர மோடியின் பின்னாள் அணி திரண்டிருப்பதாகவும் பேட்டியளித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அகமதாபாத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் அக்பரின் உருவபொம்மையை நேற்று எரித்தனர். அப்போது மோடி மற்றும் அக்பருக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்