50 மோடிகள் பிரதமரானாலும் முஸ்லிம்களுக்கு பயமில்லை: ஜாமியத் உலமா
குவஹாத்தி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி கவலை இல்லை என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் சையது அர்ஷத் மதானி அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் எந்த மோடிக்கும் கவலைப்படவில்லை. 50 மோடிகள் வந்தாலும், நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.
ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் இருவருமே இந்த நாட்டைச் சார்ந்தவர்களே. பல நூற்றாண்டுகளாக இரு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வசித்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு போலி என்கவுன்ட்டர்கள் மூலம் சில அப்பாவி முஸ்லிம்களும் கொல்லப்படுகின்றனர். சண்டையின் மூலம் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அனைவரும் நேசத்துடனும், பாசத்துடனும் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.