ராமநவமி ஊர்வலத்தில் கலவரம்..முஸ்லீம்களின் கடைகள், வீடுகள் இடிப்பு..பழிக்கு பழியா?விளக்கும் ஆட்சியர்
போபால்: ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் உள்ள முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் ம.பி. அரசால் இடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ராம நவமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் தலாப் சவுக் பகுதியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பஜனைகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்கிருந்த சிலர் இந்த ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இதையடுத்து கவுசாலா மார்க், தபாடி சவுக், சஞசய் நகர் மற்றும் மோட்டிபுரா பகுதிகளில் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் அங்கு சென்றனர்.

மாவட்ட எஸ்பி
அப்போது கார்கோன் மாவட்ட எஸ்பி சித்தார்த் சவுத்ரியின் கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 70 க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீச்சு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் முஸ்லீம்களின் கடை, வீடுகள் மத்திய பிரதேச அரசு அதிகாரிகளால் இடிக்கப்பட்டன.

ஏழை குடும்பம்
ஏழை குடும்பத்தை சேர்ந்த முஸ்லீம்களின் வீடுகளும் துவம்சம் செய்யப்பட்டன. அது போல் கார்கோனில் சீருடையில் வந்த நபர்கள் அதிகாலை 3 மணிக்கு பிலால் மசூதியின் கேட்டை உடைத்ததாக தெரிகிறது. அங்கு ஒரு முஸ்லீம் மூதாட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டில் எந்த ஆணும் இல்லை.

மூதாட்டி தாக்குதல்
ஆயினும் அவர்கள் அந்த மூதாட்டியை கடுமையாக தாக்கியதையடுத்து அந்த மூதாட்டி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் செய்ததாக முஸ்லீம் நபர்களை கைது செய்துள்ள போலீஸார் முஸ்லீம்களின் வீடுகளை துவம்சம் செய்த நிலையில் இதுவரை இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும்
இந்த நிலையில் முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் போலீஸார் முன்னிலையில் இடித்து தள்ளியது குறித்து கார்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரகாவிடம் கேட்ட போது அவர் கூறுகையில் கடைகள், வீடுகள் இடிப்பு என்பது இந்து முஸ்லீம் கலவரத்தின் தொடர்ச்சி அல்ல. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மக்களின் வீடுகளையும் கடைகளையுமே இடித்துள்ளோம்.

2.5 கோடி சொத்துகள்
2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இடித்துள்ளோம். அதில் ஒன்றோ அல்லது இரண்டோ மட்டுமே வீடுகளாக இருக்கும். பெரும்பாலான கடைகளில் சாலையின் ஓரம் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்களை காலி செய்யும்படி சட்டபடி நேரம் கொடுத்தும் அவர்கள் காலி செய்யவில்லை. அதனால் இடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த நடவடிக்கைக்கும் ராம நவமி கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications