குழந்தையின் பாலினத்தை “ஸ்கேன்” செய்து கூறிய மருத்துவமனைக்கு சீல்!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் குழந்தையில் பாலினத்தை முன்னரே சொன்ன மருத்துவமனை ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் பாலினம் தொடர்பான விபரங்களை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அறிவிக்கும் பழக்கத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தலைமை மருத்துவர் பணியில் இல்லாத நேரம் பார்த்து, நேற்று ஒரு கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்து அவரது வயிற்றில் வளர்ந்துவரும் சிசுவின் பாலினம் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியில் கசிந்ததை தொடர்ந்து, அந்த ஆஸ்பத்திரிக்கு மாவட்ட மருத்துவ அதிகாரிகள் "சீல்" வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்டு அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.