என் கிட்னி விற்பனைக்கு, விலை ரூ. 8 லட்சம்: விளம்பரம் செய்த ஸ்குவாஷ் வீரர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது ஸ்குவாஷ் வீரர் ரவி தீக்சித் தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க ஸ்பான்சர் இல்லாததால் தனது சிறுநீரகம் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்தவர் ரவி தீக்சித்(20). ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். அடுத்த மாதம் துவங்க உள்ள தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க அவர் சென்னையில் பயிற்சி பெற்று வருகிறார்.

அவருக்கு போதிய ஸ்பான்சர் இல்லாததால் பயிற்சிக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் தான் அவர் தனது சிறுநீரகம் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரவி.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
நான் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்குவாஷ் விளையாடி வருகிறேன். பல பதக்கங்கள் வென்றும், இந்தியாவுக்காக பலமுறை விளையாடியும் எனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தாம்பூர் சர்க்கரை ஆலை எனக்கு ஆதரவு அளிக்கிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு தான் என்னை ஆதரிப்பார்கள்?
அடுத்த மாதம் கவுஹாத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. அதில் நான் இந்தியா சார்பில் பங்கேற்கிறேன். அந்த போட்டியில் பங்கேற்க நான் சென்னையில் பயிற்சி பெற்று வருகிறேன். ஆனால் பயிற்ச்சிக்கு என்னால் பணம் திரட்ட முடியவில்லை. அதனால் என் சிறுநீரகத்தை விற்க தயாராகிவிட்டேன்.
யாருக்காவது என் சிறுநீரகம் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம். என் சிறுநீரகத்தின் விலை ரூ. 8 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications