இத்தோடு முடியாது கருப்பு பண ஒழிப்பு.. அடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? மோடி பரபரப்பு பேச்சு
கருப்பு பண ஒழிப்பில் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எடுப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கோவா: கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை இத்துடன் நின்று விடாது என்று எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அடுத்ததாக பினாமி சொத்து வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை நாட்டின் சொத்தாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
கோவாவில் மொபா என்ற இடத்தில் கிரின்பீல்ட் விமான நிலையம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கரென்சி நோட்டு விஷயத்தில், நான் எடுத்தது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை போன்று அல்ல. புதிய கரன்சி நோட்டுக்கள் அச்சடிப்பது முதல் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருந்தது.

பல திட்டங்கள்
இந்தியாவை ஊழலற்றதாக மாற்ற என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. ரூ.2 லட்சத்துக்கு மேல் மக்கள் நகை வாங்கும்போது பான் எண் கட்டாயம் என்ற விதிமுறையை தளர்த்தும்படி எம்.பி.க்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்பினர். அவற்றை நான் வெளியிட்டால், அவர்கள் தொகுதி பக்கமே செல்ல முடியாது. நிலக்கரி ஊழல் உட்பட பல ஊழல்களில் ஈடுபட்டவர்கள், தற்போது ரூ.4 ஆயிரம் பணத்தை மாற்ற வரிசையில் நிற்கிறார்கள்.

ஒருமுறை போதும்
இந்த கஷ்டம் 50 நாட்களுக்குத்தான். ஒரு முறை சுத்தப்படுத்திவிட்டால், பின் ஒரு கொசு கூட பறக்காது. ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை கண்டுபிடிக்க உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம். தாங்களாக கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் மூலம் ரூ.67 ஆயிரம் கோடியை வசூல் செய்தாம். கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய ரெய்டு மூலம் அரசுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

பினாமி சொத்துக்கள்
எனக்கு எதிராக உள்ள சக்திகள் பற்றி எனக்கு தெரியும். அவர்கள் என்னை அழிக்கலாம். ஏனென்றால் அவர்களின் 70 ஆண்டு கொள்ளைக்கு தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். பணத்தை திரும்ப பெறுவதோடு, கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கை நிற்காது. பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம். அவையெல்லாம் நாட்டின் சொத்து. ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை மிக முக்கியமானது.

பீதி வேண்டாம்
அரசின் நடவடிக்கையால் மக்கள் பீதியடைய வேண்டாம். ரூ.500 கொடுத்து, ரூ.300 வாங்க வேண்டாம். இந்த நடவடிக்கையில் சிரமங்கள் இருந்தாலும், அதிக பலன் கிடைக்கும். இவ்வாறு மோடி பேசினார். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு மேலும் பல அதிரடிகள் வரும் என பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தின்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications