மைசூரின் 27வது மன்னரானார் யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ்!
மைசூரு: மைசூரு யதுவம்சத்தின் 27வது மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாருக்கு இன்று முடிசூட்டுவிழா நடைபெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மைசூர் மாகாணத்தின் மன்னராக இருந்தவர் ஸ்ரீஜெயசாமராஜேந்திர உடையார். இவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை தனது மகனாகத் தத்தெடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1974ம் ஆண்டு நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவாக முடிசூடினார். இவர் கடந்த 2013 டிசம்பர் 10ம் தேதி மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.

மன்னர் குடும்ப வழக்கப்படி, பெண் வாரிசுகளின் ஆண்பிள்ளைகளே அடுத்த மன்னராக பதவியேற்பார்கள். அதன்படி, மறைந்த நரசிம்மராஜ உடையாரின் மூத்த சகோதரி மகள் திரிபுரசுந்தராதேவி மகன் யதுவீர கோபாலராஜாவை வாரிசாக தத்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கடந்த பிப்ரவரி 23-ல் யதுவீர கோபாலராஜா, யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் என பெயர் மாற்றப்பட்டு தத்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, யது வம்சத்தின் 27வது மன்னராக யதுவீரகிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் முடிசூட்டுவிழா நிகழ்ச்சி மைசூர் அரண்மனை திருமண மண்டபத்தில் இன்று காலை 9.20 மணி முதல் 10.35 மணிக்குள் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மடாதிபதிகள், மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
முடிசூட்டு விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது.












Click it and Unblock the Notifications