பி.சி.சி.ஐ. கூட்டத்தில் பங்கேற்பு: சுப்ரீம்கோர்ட்டில் மன்னிப்பு கோரினார் என்.சீனிவாசன்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக உச்சநீதிமன்றத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என். சீனிவாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு சென்னையில் கடந்த 8-ம் தேதி கூடியது. சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் மார்ச் 2-ந்தேதி கூட்டி உச்சநீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவது பற்றி ஆலோசிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகப் பொறுப்பில் என்.சீனிவாசன் இருப்பது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும்போது, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றது தவறு. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த என்.சீனிவாசனின் நிலைப்பாடு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, சீனிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சென்னை கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மேலும் மார்ச் 2-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொள்ளமாட்டார் என்றும் கபில்சிபல் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications