மீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி? வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்!
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் ஷிக்கா ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அந்த இடத்தை நிரப்ப மீண்டும் நந்தன் நிலகேனியை இன்போசிஸ் நிறுவனம் ஈர்க்க முழு முயற்சி எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்திய ஐடி துறையின் முக்கிய பங்காளரான இன்போசிஸ் நிறுவனத்தை சுமார் 30 வருடங்கள் முன்பு தொடங்கிய 7 நிறுவனர்களில் ஒருவர்தான் நந்தன் நிலகேனி.
ஆதார் அடையாள அட்டை அமைப்பின் தலைமை பொறுப்புக்கு மத்திய அரசு இவரை நியமித்ததால், 2009ம் ஆண்டு இன்போசிஸ் பதவியை துறந்து சென்றார்.

தேர்தலில் போட்டி
இதன்பிறகு 2014 லோக்சபா தேர்தலில் பெங்களூர்-தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எனவே ஆதார் பணியிலிருந்து தன்னை விடுவித்தார். இருப்பினும் இத் தேர்தலில் பாஜகவின் அனந்தகுமாரிடம், நிலகேனி தோல்வியடைந்தார்.

பங்குகளில் உயர்வு
நிலகேனி திரும்ப வருவதாக ஒரு சில ஆங்கில ஊடங்களில் செய்திகள் வெளியானதுமே இன்போசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன. இது அவரது வருகையால் இன்போசிஸ் பலம் பெறும் என்ற பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

இரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நிலகேனி இன்போஸ் நிறுவனத்தில் non-executive chairman என்ற பதவியில் அமரப்போவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் எனவும் அந்த நிறுவன வட்டாரங்கள் தெதரிவிக்கின்றன.

நிலகேனி தேவை
இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், நந்தன் நிலகேனியை இன்போசிஸ் தலைவராக நியமிக்க வேண்டும். தற்போதைய சேர்மன் சேஷசாயி மற்றும் இணை சேர்மன் ரவி வெங்கடேசன் ஆகியோர் பதவியை துறக்க வேண்டும். நிலகேனிக்கும் இன்போசிசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் தகவலை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார். இதனிடையே பிர்லா சன் லைப் உட்பட 12 முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நந்தன் நிலகேனியை இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள கோரிக்கைவிடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
இதனிடையே நிலகேனி தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திவரும் சூழலில் இன்று மாலை 6.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டத்தை இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தள்ளி வைத்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஆலோசனை கூட்டத்தை தள்ளி வைத்துள்ளார். எனவே அடுத்த கூட்டத்திற்குள் இன்போசிஸ் இருக்கையில் நந்தன் நிலகேனி அமர்ந்துவிடுவார் என ஆரூடம் கூறுகிறார்கள் ஐடி துறை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications