காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை... இதில் அரசை எப்படி நம்பும்- மோடி கேள்வி
காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை இதில் அரசை எப்படி நம்பும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
டெல்லி: காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை. எனவேதான் அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனினும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார் மோடி.
அப்போது அவர் கூறுகையில் எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை குழப்புகிறார்கள். 15 கோடி மக்களுக்கு மண் பரிசோதனை அட்டை தரப்பட்டுள்ளது.
இந்தியாவில்
கடந்த 2 வருடங்களில் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர். யூரியா பற்றாக்குறை இப்போது இந்தியாவில் கிடையாது. அரசு ஏழைகளுக்காக உழைத்து வருகிறது.
மக்கள் மீது ஆட்சியாளர்கள்
13 கோடி இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்கியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைகளுக்கும் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது. விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம். நாட்டில் வளர்ச்சியில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மீது ஆட்சியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
போர் தொடரும்
தவறான வழிக்கு செல்லவிருந்த ரூ.90 ஆயிரம் கோடி அரசு பணத்தை தடுத்துள்ளோம். 4500 பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது. கருப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும்.
எப்படி நம்புவர்
இன்னும் கூட அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையாம். காங்கிரசுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை, எனவேதான் அரசையும் நம்பவில்லை. தன் மீதே தங்களுக்கு நம்பிக்கையில்லாதவர்கள் எப்படி அரசை நம்புவர் என்று மோடி கேள்வி எழுப்பினார்.