மனைவி இருப்பதை திடீரென நரேந்திர மோடி ஒப்புக் கொண்டது ஏன்?
அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு போட்டு உண்மையை உலகுக்கு சொல்ல வைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமானதை பகிரங்கமாக இம்முறை ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் தமது திருமணம் குறித்த இடத்தில் எதுவும் குறிப்பிடாமல்தான் தாக்கல் செய்து வந்தார் நரேந்திர மோடி. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, தமக்கு குடும்பம் எதுவும் இல்லை.. நான் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான் பேச்சாக இருக்கும்.

இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் பேசுகையில், என் மனைவியைத் தவிர என்னை யார் பார்த்துக் கொள்ள முடியும். நான் ஏதாவது தவறு செய்தால் என் மனைவிதான் தடுக்க முடியும் என்றும் கூறி வந்தார்.
அத்துடன் ஆம் ஆத்மிதான் மோடிக்கு திருமணமான விவகாரத்தை அம்பலப்படுத்தி வந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் கூட தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற பிரச்சனைகளை தேர்தல் ஆணையம்தான் கையாள வேண்டும் என்று கூறியதுடன் இம்முறை வேட்புமனுவின் அனைத்து பகுதிகளையும் வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும்..இல்லையெனில் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியது.
இதனால்தான் எங்கே உண்மையை மறைத்தால் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துவார்களோ என கருதியே இப்போது திருமணமாகிவிட்டது எனக் கூறியிருக்கிறார் மோடி.
தேர்தல் களத்தில் இன்னும் எத்தனை உண்மைகள் வருமோ?












Click it and Unblock the Notifications