ஜெத்மலானி வீட்டில் 'படபட' சந்திப்பு... மோடியுடன் பேசாமல் 'உம்'மென்றிருந்த அத்வானி!
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி.
ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார்.
பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை.

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் மோடியைக் கடுமையாக எதிர்த்து வந்தார் அத்வானி. ஆனால் அத்வானியின் பிடிவாதத்தையும், எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்து விட்டது. இதனால் கோபத்துடன் இருக்கிறார் அத்வானி. இருப்பினும் அமைதி காக்கிறார். எந்தவிதமான புரட்சிகரமான எதிர்ப்பையோ அல்லது அறிவிப்பையோ அவர் இதுவரை வெளியிடவில்லை.
நேற்றைய சந்திப்பின்போது, அத்வானியையும், மோடியையும் அருகருகே உட்கார வைக்க ராம் ஜெத்மலானி முயற்சித்தார். ஆனால் நீங்கள்தான் இன்று நாயகர் நீங்கள் நடுநாயகமாக அமருங்கள் என்று அத்வானி கூறி விட்டு, மோடி அருகே உட்காருவதை தவிர்த்து விட்டார்.
ராம் ஜெத்மலானி ஒரு தீவிர மோடி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கு. மோடியுடனான மோதலில் அத்வானி ஜெயிக்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications