மகாராஷ்டிராவில் மோடி தேர்தல் பிரசாரம்: சிவசேனா எதிர்ப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் மோடி அலையால் பாஜக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சி நம்பினால் தேர்தல் பிரசாரத்தில் மோடி பங்கேற்க வேண்டியதன் அவசியம் இல்லையே என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்தன.
ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் இரு கட்சிகளிடையேயான 25 ஆண்டுகால கூட்டணி முறிந்து தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 4 மற்றும் 13 ஆம் தேதிகளில் மகாராஷ்டிராவில் 24 தேர்தல் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்வார் என்று அந்த மாநிலத்தின் பாஜக பொதுச் செயலாளர் ராஜிவ் பிரதாப் ருடி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
மகாராஷ்டிராவில் மோடி அலை இருப்பதாக பாஜக நம்பினால் அவர் பல கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லையே. சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு பிரதமர் அதிக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
சிவசேனாவின் மத்திய அமைச்சர் அனந்த் கீதே பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக பிரதமருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.