இயற்கையை காப்போம்! மோடி அழைப்பு
டெல்லி: வாழ்க்கையின் சிறு தருணங்களிலும் இயற்கையை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதை, பிரதமர் நரேந்திரமோடி தனது உலக சுற்றுச்சூழல் தின உரையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் வலைத்தளத்தில் மோடி கூறியுள்ளதாவது: இயற்கையை அழிக்காமல், அதை பயன்படுத்தும் வாழ்க்கையை வாழ வேண்டும். அப்போதுதான் வருங்கால தலைமுறைக்கு நாம் மகிழ்ச்சியை விட்டுச் செல்ல முடியும். இயற்கையை காப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுடன், மக்களின் பங்களிப்பும் சமமாக இருந்தால்தான் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியும்.
சுத்தமான, பசுமையான உலகை உருவாக்க முடியும். உலக சுற்றுச்சூழல் தினத்தை, தாய் பூமியை காப்பாற்ற உறுதி ஏற்கும் தினமாக மாற்றிக்கொள்ளுவோமாக. இயற்கையை போற்றி பாதுகாக்கும் கலாசாரத்தில் நாம் பிறந்துள்ளோம். தினசரி வாழ்க்கையில் சிறு தருணங்களிலும் நமது முயற்சி இயற்கையை காப்பாற்றுவதாக இருக்குமாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.