அமெரிக்க விசாவிற்கு மோடி விண்ணப்பிக்க கூடாது: அருண் ஜெட்லி

தனது இணையதள பக்கமான அருண்ஜெட்லி டாட் காமில் எழுதியுள்ள அவர், மோடி அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை என கூறியுள்ளார்.
"முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க முயற்சித்தது தவறு என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக தொடர்ந்து விசாரணை மேல் விசாரணை நடத்தப்பட்டது தவறு என்றும், அந்த விசாரணையைக் கருத்தில் கொண்டு மோடி குற்றமுள்ளவர் என அமெரிக்கா தீர்மானித்தது தவறு" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.
இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி மீது குற்றம் சாட்டியிருந்த அவர், மீண்டும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்பதாக கூறி உத்தரவிட்டார். இதனால், நரேந்திர மோடிக்கு இருந்த நெருக்கடி நீங்கியது.
இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்க அரசாங்கம், மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. இப்போது மோடி விடுவிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், அவர் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அமெரிக்கா விசா கேட்டு மோடி விண்ணப்பிக்கக் கூடாது என்று கருத்து கூறியுள்ளார் அருண் ஜெட்லி.












Click it and Unblock the Notifications