பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!! ஆப்கன் அதிபருடன் முதல் சந்திப்பு!!
டெல்லி: பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றார்.
நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 9.00 மணியளவில் டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். காரில் வந்திறங்கியதும், அங்கு பிரதமர் அலுவலக அதிகாரிகள் பிரதமர் மோடியை பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். அலுவலகம் உள்ளே சென்ற மோடி அலுவலகத்தில் இருந்த காந்தி படத்திற்கு மலர் தூவி வணங்கி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.
அங்கே தயாராக இருந்த கோப்பை அதிகாரிகள் பிரதமரிடம் கொடுத்தனர் . தொடர்ந்து பிரதமராக முதல் கையொப்பமிட்டு பொறுப்பை மோடி ஏற்று கொண்டார்.
ஆப்கன் அதிபருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் ஹைதராபாத் இல்லம் சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயை மோடி சந்தித்துப் பேசினார்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி சந்தித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஹமீத் கர்சாய் என்பது குறிப்பிடத்தக்கது.