மோடிக்கு ஓட்டுப் போட்டாதான் குஜராத்தில் வாழ முடியும் நிலை...: உ.பி. அமைச்சர் ஆசம் கான்!
லக்னோ: குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடிக்கு ஓட்டு போட்டால்தான் முஸ்லிம்கள் வாழ முடியும் என்கிற பயங்கரவாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான் சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இம்மாநிலத்தில் ஒரு ஆண்டில் 150 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் குஜராத்தில் 10 ஆண்டுகாலத்தில் ஒரு கலவரமும் கூட நடைபெறவில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசம் கான், குஜராத்தில் எப்படி கலவரங்கள் வெடிக்கும்? அங்கே இருப்பவர்கள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்துவிட முடியுமா? அப்படி இருந்தால் அவர்கள் ஆசிட் ஊற்றி எரித்துவிடமாட்டார்களா? வேறவழியில்லை.. அவர்கள் எங்கே போவார்கள்?
குஜராத்தில் அவர்கள் வாழ வேண்டும் எனில் நரேந்திர மோடிக்கு வாக்களித்தாக வேண்டும் அப்படி ஒரு அச்சுறுத்தலான பயங்கரவாத நிலையை மோடி உருவாக்கி வைத்திருக்கிறார் என்றார்.