”பாகிஸ்தானை” வீழ்த்திய “தேசிய கட்சி” நமக்கு உதவும் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் உறுதி
கவுஹாத்தி: பாகிஸ்தானை வீழ்த்திய தேசிய கட்சி தங்களுக்கு உதவ முன்வந்திருப்பதாகவும், ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
புதிய ட்விஸ்ட்! சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்.. சஸ்பெண்ட் முடிவை எடுக்கும் உத்தவ் தாக்கரே
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
பாஜக வியூகம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.
குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்தது. நேற்று முந்தினம் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் நேற்று அவர்கள் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாளிகையிலிருந்து வெளியேறிய உத்தவ்
இந்த நிலையில் நேற்று பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். இதனிடையே இன்று மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சரத் பவார் கூறியுள்ளார்.
சஸ்பெண்ட்
கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு 37 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் அதை அவர்களுக்கு சுமார் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்து உள்ளது. மறுபக்கம் சிவசேனாவும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் உத்தவ் தாக்கரே முதல்கட்டமாக 17 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்சி ஆதரவு
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், "நமது சுக துக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்குதான். ஒரு தேசிய கட்சி.. "மகாசக்தி". உங்களுக்கு தெரியும், அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தினர். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளனர்." என்றார்.