பாஜகவுடன் கை கோர்த்து பிஜேடியை விகே பாண்டியன் உடைக்கப் போகிறாரா? நவீன் பட்நாயக் செம்ம கோபம்!
புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து ஒடிஷாவின் எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளத்தை முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் வலதுகரமான விகே பாண்டியன் உடைக்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த ஊடகத் தகவல்கள் அனைத்தும் விஷமத்தனமானது; திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது என கொந்தளித்துள்ளார் மாஜி முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிஷாவில் அசைக்க முடியாத ஆளுமையாக நவீன் பட்நாயக் இருந்து வந்தார். ஒடிஷாவில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளத்தை பாஜகவால் வீழ்த்த முடியுமா? என்ற கேள்வியும் இருந்தது.

ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. ஒடிஷா தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தவர் பெயர் விகே பாண்டியன். தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரி. ஒடிஷா அரசில் பணியாற்றிய நிலையில் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் வலதுகரமானார். பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியிலும் இணைந்தார். ஒரு கட்டத்தில் நவீன் பட்நாயக்குக்குப் பின் அரசியல் வாரிசு விகே பாண்டியன்தான்; அவர்தான் ஒடிஷாவின் அடுத்த முதல்வர் எனவும் பேசப்பட்டது.
இதனையே நவீன் பட்நாயக்கையும் பிஜூ ஜனதா தளத்தையும் வீழ்த்தும் ஆயுதமாக்கியது பாஜக. ஒடிஷா மக்களை தமிழர் ஒருவர் ஆள அனுமதிக்கலாமா? என்பது தொடங்கி விகே பாண்டியனுக்கு எதிராக முழு வீச்சில் பிரசாரம் செய்தது பாஜக. இதற்கு பலனும் கிடைத்தது. ஒடிஷாவில் நவீன் பட்நாயக் முதல்வர் பதவியையும் ஆட்சியையும் இழந்தார்.
ஒடிஷாவில் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் விகே பாண்டியன். இந்த நிலையில்தான் பாஜகவுடன் இணைந்து பிஜூ ஜனதா தளத்தை உடைக்க விகே பாண்டியன் முயற்சிக்கிறார்; இதற்காக டெல்லிக்கு பல முறை சென்று வந்தார் என ஊடக செய்திகள் பரபரப்பை கிளப்பிவிட்டன.
ஆனால் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கோ, இப்போதும் விகே பாண்டியன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். விகே பாண்டியன், பாஜகவுடன் இணைவதாக வெளியான செய்திகள் விஷமத்தனமானது; திட்டமிட்ட பொய்ச் செய்திகள் என கொந்தளித்துள்ளார் நவீன் பட்நாயக்.












Click it and Unblock the Notifications