காங். தலைவர் பதவி-சித்து ராஜினாமா- 'முதல்வர் பதவி' கோபமா?அமரீந்தர் பாஜகவுக்கு போவதை தடுப்பதற்காகவா?
சண்டிகர்; பஞ்சாப் அரசியலில் இன்னொரு புதிய பரபரப்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையக் கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் கிரிகெக்ட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தமது ராஜினாமா கடிதத்தை சித்து அனுப்பி உள்ளார்.
பஞ்சாப்பில் அரசியலில் திடீர் திருப்பம்- பாஜகவில் இணைகிறாரா மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்?
காங்கிரஸில் நீடிப்பேன்-சித்து
பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்காலம் ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது; தாம் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் காங்கிரஸுக்காக பணியாற்றுவேன் என தமது ராஜினாமா கடிதத்தில் சித்து தெரிவித்துள்ளார். அமரீந்தர்சிங்- நவ்ஜோத்சிங் சித்து இடையேயான மோதல் உக்கிரமடைந்த நிலையில் சித்துவின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமரீந்தர்சிங்- சித்து மோதல்
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் அமைச்சரவையில்தான் சித்து இடம்பெற்றிருந்தார். ஆனால் அமரீந்தர்சிங்- சித்து இடையே கருத்து மோதல் வெடித்தது. இதனால் சித்துவின் இலாகா மாற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்து சித்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பினர் சித்துவை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் துணை முதல்வராக்க டெல்லி மேலிடம் விரும்பியது. இதற்கு அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முதல்வர் பதவியை இழந்த அமரீந்தர்
ஒருவழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை சித்து பெற்றுவிட்டார். அப்போதிருந்தே அமரீந்தர்சிங்கின் முதல்வர் நாற்காலி மீது கண்ணாக இருந்தவர் சித்து. ஒருகட்டத்தில் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சித்துவின் சதிவிளையாட்டில் சிக்கிய எம்.எல்.ஏக்களால் முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்ய நேரிட்டது. அப்போது சித்துவின் பெயரும் முதல்வர் ரேஸில் அடிபட்டது. ஆனால் சித்துவுக்கு முதல்வர் பதவி தரக் கூடாது; அவர் தேசபாதுகாப்புக்கே எதிரானவர்; பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதியுடன் உறவு வைத்திருப்பவர்; அவரை முதல்வராக்கினால் கடுமையாக எதிர்ப்பேன் என்றார் அமரீந்தர்சிங்.
சித்துவின் முதல்வர் கனவுக்கு வேட்டு
இதனால் எளிதாக கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி சித்துவுக்கு கிடைக்காமல் போனது. இதில் சித்து கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் இப்போது பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டார் சித்து என ஒருதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் இது காங்கிரஸ் கட்சியின் தடாலடி வியூகம் என மற்றொரு தரப்பு கூறுகிறது.
அமரீந்தரை தடுக்கும் யுக்தி?
அதாவது கடுமையான அதிருப்தியில் இருக்கும் அமரீந்தர்சிங் டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் அமித்ஷா, ஜேபி நட்டாவை அமரீந்தர்சிங் சந்திக்க இருக்கிறார்; இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஜகவில் அமரீந்தர்சிங் இணைவார் எனவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அமரீந்தர்சிங் தரப்பு மறுத்தது. அமரீந்தர்சிங் பாஜகவில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே சித்துவின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அமரீந்தர்சிங்கை சமாதானப்படுத்தி காங்கிரஸ் கட்சியிலேயே தக்க வைக்கும் டெல்லியின் யுக்தியாகவே சித்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என்பதுதான் மற்றொரு தரப்பு கருத்து.