சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்
சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதையறிந்து கொண்ட மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.