'ஷாக்' .... ஆன்மீக தேடலில் குதித்த மாஜி நக்சல்பாரி புரட்சி பாடகர் கத்தார்!
மாஜி நக்சல்பாரி புரட்சி பாடகர் கத்தார் இப்போது மும்முரமான ஆன்மீக தேடலில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஹைதராபாத்: மாவோயிஸ்டுகளின் மாஜி புரட்சி பாடகர் கத்தார் தற்போது தீவிர ஆன்மீக தேடலில் குதித்துள்ளார். கோவில் கோவிலாக குடும்பத்துடன் சுற்றி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆந்திராவில் நக்சல்பாரி இயக்கத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் புரட்சி பாடகர் கத்தார். மக்கள் யுத்தக் குழு, மாவோயிஸ்டுகள் இணைந்து புதிய இயக்கமாக விஸ்வரூபமெடுத்த காலம் தொடங்கி தம்முடைய இடதுசாரி புரட்சிகர குரலை அடக்கி வாசிக்கத் தொடங்கினார் கத்தார்.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது புரட்சிகர பாடல்கள் பலரையும் ஈர்த்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைத்தது என்பது வரலாறு.
இத்தகைய புரட்சிப் பாடகர் இப்போது தெலுங்கானாவில் நல்ல மழை பெய்ய வேண்டி, தெலுங்கானா நன்றாக வளர்ச்சி அடைய வேண்டி கோவில் கோவிலாக கடந்த சில மாதங்களாக சுற்றி வருகிறார். கருப்பு சிவப்பு போர்வையை போர்த்திக் கொண்டு உச்சஸ்தாயில் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்த கத்தார் இப்போது ஆண்டவனின் தூதராகிப் போனது வரலாற்றின் வினோதமே!