கூட்டணி அரசில் இந்த பதவி மிக முக்கியம்! ஆபத்துக்கு உதவும்! சபாநாயகருக்கான போட்டியில் டிடிபி, ஜேடியூ
டெல்லி: 18வது லோக்சபாவுக்கு யார் சபாநாயகர் என்ற கேள்வி அரசியலை உலுக்க ஆரம்பித்துள்ளது. புதிய லோக்சபா கூடுவதற்கு முன், ஏற்கனவே உள்ள சபாநாயகர் பதவி காலியாக வேண்டும் என, அரசியல் சாசனம் கூறுகிறது. அதேநேரம் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகரை ஜனாதிபதி நியமிப்பது வழக்கம். இதையடுத்து, மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் வாக்களிப்பு பெரும்பான்மை பலத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் போட்டியில் எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் வாக்களிப்பு இல்லாமல் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

கடந்த இரண்டு லோக்சபாக்களிலும், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால் தங்கள் கட்சியைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜனையும், ஓம் பிர்லாவையும் முறையே, சபாநாயகராக நியமித்தது. இம்முறை, தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு ஆகிய கூட்டணி கட்சிகள் இந்த பதவிக்கு காய் நகர்த்துகின்றன. ஆனால் பாஜக அந்த பதவியை விட்டுத்தரக் கூடாது என்ற உறுதியில் உள்ளது.
லோக்சபா சபாநாயகர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பதவியை வகிக்கக் கூடியவர். வானளாவிய அதிகாரம் கொண்டவர் (அதை ஆளும் கட்சிக்கு எதிராக பொதுவாக பயன்படுத்துவது இல்லை). சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் சபாநாயகர் பதவி தங்கள் கட்சியிடம் இருந்தால் அது ஒரு துருப்புச் சீட்டு என பார்க்கிறார்கள். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின்போது சபாநாயகர் முடிவே இறுதியானது. இதை விட்டால் கோர்ட்டுக்குதான் போக வேண்டும். அங்கே வழக்கு எத்தனை வருடம் நடைபெறும் என்று கூறிவிட முடியாது.
பாஜக தனது கட்சியை உடைக்க முயற்சிப்பதாக நிதிஷ்குமார் முன்பு குற்றம் சாட்டியவராகும். எனவே அவர் சபாநாயகர் பதவியை அத்தகைய பாஜகவின் நகர்வுகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகக் கருதுகிறார். சபாநாயகர் ஏதாவது ஒரு கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருப்பார் என்ற போதிலும் கூட, அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எந்த கட்சி சார்பாகவும் அவர் முடிவுகளை எடுக்க கூடாது. இதனால்தான், அவர்களால் நேரடி அரசியலில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்படும்.
நாட்டின் நான்காவது லோக்சபா சபாநாயகராக இருந்த சஞ்சீவ் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு சபாநாயகராக பணியை தொடர்ந்தார். அந்த அளவுக்கு இந்த பதவிக்கு புனிதம் உள்ளது. பி.ஏ.சங்மா, சோம்நாத் சாட்டர்ஜி, மீரா குமார் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்ற போதிலும் எதிர்க்கட்சிகளுக்கு அதிக ஆதரவுடன் நடந்து கொண்டனர். 2008 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் போது ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அப்போது சபாநாயகராக இருந்த சோமநாத் சட்டர்ஜியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியை விட்டு நீக்கியது நினைவிருக்கலாம்.
கூட்டணி ஆட்சியின்போது கூட்டணியின் பெரிய பார்ட்னரை மிரட்ட தங்கள் கட்சியிலிலுள்ளவர் சபாநாயகராக இருப்பது அவசியம் என்பது அனைத்து கூட்டணி கட்சிகளுமே விரும்பக் கூடியதுதான்.












Click it and Unblock the Notifications