20 வருடமாக நேதாஜி குடும்பத்தை உளவு பார்த்த நேரு!
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி உளவுத்துறையினர் கிட்டத்தட்ட 20 வருடம் உளவு பார்த்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
நேருவுக்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசுகளும் இந்த உளவு பார்த்தலைத் தொடர்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 1948ம் ஆண்டு முதல் 68ம் ஆண்டு வரை போஸ் குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு வந்த கடிதங்கள், அவர்கள் அனுப்பிய கடிதங்களை வேவு பார்த்துள்ளனர். மேலும் அவர்களை பின்னாலேயே நிழல் போல தொடர்ந்து சென்றும் உளவு பார்த்துள்ளனர்.
நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸின் மகன்களைத்தான் அதிகம் உளவு பார்த்துள்ளனர். இவர்கள்தான் நேதாஜிக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்துள்ளனர் என்பதால் அவர்களை அதிகமாக பின் தொடர்ந்துள்ளனர்.
இந்த உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ் கூறுகையில், சுபாஷ் சந்திர போஸ் என்ன தீவிரவாதியா அல்லது குற்றவாளியா. அவர்இந்தியாவின் விடுதலைக்காககப் போராடியவர். அவரை ஏன் வேவு பார்த்ததார் நேரு என்பது புரியவில்லை. வேதனையாக இருக்கிறது என்றார்.
நேதாஜியின் மகள் அனிதா போஸும், இந்தத் தகவலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், எனது சித்தப்பா சரத் சந்திர போஸ், 1950கள் வரை அரசியலில் தீவிரமாக இருந்தார். அவருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் அப்போது சரிப்பட்டு வரவில்லை. ஆனால் அவரது பிள்ளைகளை நேரு உளவு பார்த்தார் என்பது அதிர்ச்சியாக உள்ளது என்றார். அனிதா போஸ் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
மேலும், நேதாஜி குறித்த அனைத்து ரகசிய ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், நேரு அரசு நேதாஜி குடும்பத்தினருக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரமும் வெளியிடப்பட வேண்டும் என்றும் நேதாஜி குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே நேதாஜியின் மரணம் குறித்த பெரும் சர்ச்சை நிலவுகிறது. அவர் ரஷ்யாவில் சிறைப்பட்டு சைபீரிய சிறையில் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. இந்த விவரம் நேருவுக்கும், எஸ்.ராதாகிருஷ்ணன், படேல் போன்றோருக்கும் தெரியும் என்றும் தகவல்கள் உள்ளன. ஆனால் இதுதொடர்பான எந்தத் தகவலையும் மத்திய அரசு வெளியிடாமல் மெளனம் சாதித்து வருகிறது.
இந்த நிலையில்தான் நேதாஜியை உளவு பார்க்க உத்தரவிட்டார் நேரு என்ற பெரும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் போஸ் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லை என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே மோடி அரசும் கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications