மேகி நூடுல்ஸை எரிக்க அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ரூ.20 கோடி கொடுத்த நெஸ்லே
மும்பை: மேகி நூடுல்ஸை அழிக்க நெஸ்லே நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி அளித்துள்ளது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது.
இதையடுத்து சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ. 320 கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழிக்கப்பட்டு வருகிறது. நூடுல்ஸை அழிக்க நெஸ்லே நிறுவனம் சிமெண்ட் ஆலைகளுக்கு பணம் அளித்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள அம்புஜா சிமெண்ட்ஸ் ஆலையில் வைத்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எரிக்கும் பணி நடந்து வருகிறது. நூடுல்ஸை அழிக்க நெஸ்லே அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ரூ. 20 கோடி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் முன்னதாக குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நெஸ்லே இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் எங்களுக்கு உதவி வருகிறது என்றார்.
நூடுல்ஸை அழிக்க அம்புஜா சிமெண்ட்ஸுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.