”நேதாஜியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு சிறுமை படுத்தாதீர்”- திரிணாமுல் எம்.பி கண்டனம்

இந்த ஆண்டின் "பாரத ரத்னா" விருதுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக யூகமான செய்தி உலா வருகின்றது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களது கருத்தை ஆமோதிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மேல்சபை எம்.பியான சுகேந்து சேகர் ராய் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தனது வீட்டை துறந்து, நாட்டை துறந்து, வெளிநாடுகளுக்கு சென்று தாய்நாட்டின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு வெளியே ராணுவம் ஒன்றை உருவாக்கி, இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர். அவரை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.
அவர் பதக்கங்களுக்காகவோ, பாரத ரத்னா விருதுக்காகவோ தனது போராட்டத்தை நடத்தியவர் அல்ல. விடுதலை போராளிகள் தங்களது உயிரை இந்த நாட்டுக்காக தான் தியாகம் செய்தார்களே தவிர பதக்கங்களுக்காக அல்ல.
எனவே, நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்கும் முடிவை மத்திய அரசு எடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், அப்படியொரு நிலையை அரசு மேற்கொண்டால் அது நேதாஜியை அவமதிப்பதாகும். அவரை சிறுமைப்படுத்துவதாகும்.
நேதாஜியை அவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும் என்றால் அவரது மறைவு தொடர்பாக அரசிடம் உள்ள கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்" என்று சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications