அயோத்தியில் ரெடியான ஏர்போர்ட்.. தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக பறக்க முடியுமா? விமானம் உள்ளதா?
அயோத்தி: அயோத்தியில் இன்று மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு பயணிகள் விமானத்தை இயக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் உலக தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அயோத்தியில் சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றார். ரயில் நிலையம் வரை உள்ள 15 கி.மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியாக சென்ற பிரதமர் மோடி, அயோத்தி ரயில் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
வால்மீகி விமான நிலையம்: பின்னர் 2 அம்ரித் பாரத் ரயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்த பிறகு அயோத்தி விமான நிலையத்துக்கு வந்து விமான நிலையத்தை திறந்து வைத்தார். சர்வதேச தரத்துடன் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: சர்வதேச விமான நிலையமாக இந்த விமான நிலையம் ரூ.1,450 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையம் முழுவதும் வண்ண அலங்காரங்கள், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஓவியங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சென்னை, டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல், அயோத்தியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு வரும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குகிறது.
படிப்படியாக உயரும்: ராமர் கோவில் வரும் 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதன்பிறகு இந்த அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இதனால் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் சென்னையில் இருந்து மட்டுமே செல்ல முடியும்.
ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் புனித பயணத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல நாட்டின் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications