விவசாய நிலத்தில் குழந்தையின் அழுகுரல்.. மண்ணில் நீண்டு கொண்டிருந்த பிஞ்சு கை.. அதிர்ந்த விவசாயி!
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை அவ்வழியாக சென்ற விவசாயி ஒருவர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
குஜராத் மாநிலம், சாபர்கந்தா மாவட்டம், காம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. எங்கிருந்து சப்தம் வருகிறது என தெரியாமல் சுற்றி சுற்றி பார்த்தார்.

பிஞ்சு கை
அப்போது ஒரு குழந்தையின் பிஞ்சு கை பூமியில் நீண்டுக் கொண்டிருந்தது. உடனே பதறி அடித்த படி அருகே மின்சார வாரியத்தில் பணிபுரிந்த ஆட்களை உதவிக்கு அழைத்தார். உடனே அனைவருமாக சேர்ந்து மண்ணுக்குள் இருந்த குழந்தையை மீட்டனர். புதைக்கப்பட்ட பெண் குழந்தை பிறந்து சில மணி நேரம் ஆனது என தெரியவந்தது.

ஆம்புலன்ஸ் வாகனம்
உடனே ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தை புதையுண்டதால் மூச்சுவிட சிரமப்பட்டது. அந்த குழந்தையை ஆழமாக புதைக்காததால் அக்குழந்தை அழும் சப்தம் கேட்டு காப்பாற்றப்பட்டது. எப்படியும் அந்த குழந்தையை காலையில்தான் புதைத்திருக்க வேண்டும் என தெரிகிறது.

போலீஸார்
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று விவசாய நிலத்தில் விவசாயி சொன்ன அந்த குழி தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். குழந்தையின் பெற்றோரை போலீஸார் தேடி வருகிறார்கள். பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை இவ்வாறு செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

விலாசம்
மேலும் தவறான உறவால் குழந்தை பிறந்திருக்கலாம் என்றும் திருமணத்திற்கு முன்பு குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகிறார்கள். அருகில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த இரு தினங்களில் குழந்தை பெற்ற தம்பதியின் போன் நம்பர், விலாசத்தை கேட்டு அங்கு அவர்களிடம் குழந்தை இருக்கிறதா என்பதை விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications