துணிச்சலுக்கு சொந்தக்காரர்.. தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய்.. யார் இவர்?
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.
முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.
உச்ச நீதிமன்ற முறைப்படியே இவரது பெயரை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அப்போதே எதிர்த்தார்
நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்து இருந்தாலும், சில நாட்களுக்கு முன் ரஞ்சன் கோகாய், தீபக் மிஸ்ராவை நேரடியாக எதிர்த்ததும் அரங்கேறியது. முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக குரல் கொடுத்த நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி மதன் லோகுர், நீதிபதி குரியன் ஜோசப், நீதிபதி செல்லமேஸ்வர் ஆகிய நால்வரும் சேர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பில் குரல் கொடுத்தனர்.

இவர்தான் முதல் நீதிபதி
நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். இவர் அசாம் மாநிலத்தில் பிறந்தவர். வடகிழக்கு பகுதியில் இருந்து வந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக போகும் முதல் நபர் இவர்தான். இது அந்த மாநிலத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

என்ன வரலாறு
அசாம் மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கோகாயின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார். முதல்முறையாக 2001ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் நீதிமன்றத்திலும், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தார். பஞ்சாப் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தார். கடைசியாக 2012ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.

பல முக்கிய வழக்கு
நீதிபதி ரஞ்சன் கோகாய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின், ஒரு நீதிபதியாக இருந்தார். குஜராத் அரசுக்கு எதிராக ரிலையன்ஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை இவர்தான் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு இப்போதும் பல நிலம் கையகப்படுத்தும் வழக்குகளில் எடுத்துக்காட்டாக வைக்கப்படுகிறது.

எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்
இவர் துணிச்சலான நேர்மைக்காக பல முறை பாராட்டப்பட்டும் இருக்கிறார். நீதிபதி ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு பணி உயர்வு பெற இவர் குரல் கொடுத்தார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது, ஆனால் அப்போது கொலிஜிய உறுப்பினராக இருந்த ரஞ்சன் கோகாய் நீதிபதி ஜோசப் பணி உயர்வு பெற குரல் கொடுத்தார், மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தார். இதேபோல் பல முறை தனித்து பல முடிவுகளை துணிச்சலாக எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications