வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. நொந்த பயணிகள்.. நடுவழியில் நின்றது.. மீட்பு இன்ஜின்+சிறப்பு ரயில்
டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை ஏட்டாவா மாவட்டத்தில் பார்தனா மற்றும் சாம்ஹோ நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. இந்த சம்பவம் பயணிகளுக்கு சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்திய போதிலும், ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகளை அவர்களின் ஊர்களை சென்று அடைய மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
மக்கள் தொடர்பு அதிகாரி அமித் சிங் கூறுகையில், புது டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 22436, காலை 9 மணிக்கு பார்தனா நிலையத்தை கடந்தபோது இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் பார்தனா மற்றும் சாம்ஹோ நிலையங்களுக்கு இடையில் நின்றுவிட்டது.

மீட்பு பணிகள்: சராய் பூபத் நிலையத்திலிருந்து காலை 10:24 மணிக்கு ஒரு மீட்பு இன்ஜின் அனுப்பப்பட்டது. இந்த மீட்பு இன்ஜின் மூலம் ரயில் பார்தனா நிலையத்திற்கு மீண்டும் இயக்கப்பட்டது. மேலும், காண்பூரிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் பயணிகளுக்காக மாலை 2:45 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரயில்வேயின் நடவடிக்கை: இந்த சம்பவம் பயணிகளுக்கு சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்திய போதிலும், ரயில்வே துறையின் விரைவான நடவடிக்கை மற்றும் மாற்று ஏற்பாடுகள், பயணிகளின் பயணத்தை குறைந்த அளவு பாதிப்போடு தொடர உதவியுள்ளது. வந்தே பாரத் ரயில்கள், பிற ரயில்களை விட மிக வேகமாக இயங்குகின்றன. இதனால், பயண நேரம் குறைந்து, பயணிகள் தங்கள் இலக்கை விரைவில் அடைய முடியும். ஒவ்வொரு பெட்டியும் முழுமையாகக் குளிர்சாதன வசதியுடன் கூடியது. எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உள்ள இருக்கைகளை 180 டிகிரி சுழற்றலாம். இருக்கையின் முன்பகுதியில் நாளிதழ்கள் வாசிக்கவும், சாப்பிடவும் வசதியாக கையடக்க மேஜை உள்ளது.ரயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவசரகாலங்களில் பயன்படுத்தக்கூடிய டாக் பேக் யூனிட் வசதியும் உள்ளது. வந்தே பாரத் ரயில்களில் பயணித்த பலரும், இந்த ரயில்கள் மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். குறிப்பாக, இணைய வசதி மற்றும் சுழலும் இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்கள் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் பெங்களூர்-மதுரை, சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் இயக்கம் தொடங்கியுள்ளது. கட்டணம் மிக அதிகம் என்ற நிலையில், இவ்வாறு நடுவழியில் பழுதாகி ரயில் நின்றிருப்பது பயணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications