2000 ரூபாய் நோட்டை கிழித்து ஜிபிஎஸ் இருக்கிறதா என 'செக்' செய்தனரா மக்கள்? போட்டோ வைரலாவது ஏன்?
டெல்லி: புதிய ரூ.2000 நோட்டுக்களில், ஜிபிஎஸ் சிப்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப்பில் வதந்தி பரவினாலும் பரவிற்று, ஆளாளுக்கு எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
ஆனால் ஆர்.பி.ஐ-யோ ஜிபிஎஸ் சிப்ஸ் மட்டுமல்ல, குர்குரே சிப்ஸ் கூட கிடையாது என தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டு ஒன்று தாறுமாறாக கிழிக்கப்பட்ட நிலையில் கிடக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
உள்ளே ஜிபிஎஸ் சிப் உள்ளதா என ஒரு நபர் செக் செய்து பார்த்துள்ளார் என்று கூறி போட்டோ சுற்றி வருகிறது. ஆனால் இதை கூர்ந்து பார்த்த மும்பையை சேர்ந்த சில கிராபிக் டிசைனர்கள், அது ஒட்டு வேலை என கூறியுள்ளனர். உண்மையில் நோட்டு கிழிக்கப்படவில்லை என அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
ஒரிஜினல் நோட்டு கூட மோசமான கிராபிக்ஸ் வேலைதான் என்று குற்றம்சாட்டுவோரும் உள்ளநர். கிராபிக் டிசைனர் மிரா மல்கோத்ரா கூறுகையில், காந்தி படம் சிறப்பாக இல்லை. அவரது முகத்தின் அருகே புள்ளிகள் காணப்படுகின்றன. ரூ.2000 நோட்டை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாமே என்கிறார்.
நார்வே நாடு தனது குடிமக்களிடமே ஐடியா கேட்டு ரூபாயை அச்சிட்டது. அதேபோல இந்தியாவிலும் செய்திருக்கலாம் என்று கூறுவோரும் உள்ளனர்.