ரூ. 42 லட்சம் கொள்ளை போனதாக டிராமா: 'மாமியார்' வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பட்டபகலில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் ரூபாய் 42 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அருகே அண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் . இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை இவர் அழுதபடியே பூஜப்புரா காவல் நிலையம் வந்தார்.
பணத்தை பறித்துச் சென்றதாக புகார்:
அப்போது அவர், தான் வீடு வாங்குவதற்காக காரில் ரூபாய் 42 லட்சம் பணத்துடன் வந்ததாகவும், பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாகவும் கூறினார்.
கிடுக்கிப்பிடி விசாரணை:
இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அசோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குட்டு வெளிப்பட்டது.
வீடு வாங்குவதாக நாடகம்:
இது குறித்து போலீசார் கூறுகையில், "அசோகன் பெண் வீட்டாரிடம் தான் ஒரு வீடு வாங்க போவதாக கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மணப்பெண்ணை அழைத்துச் சென்று தான் வாங்க போவதாகக் கூறி ஒரு வீட்டையும் காண்பித்துள்ளார்.
அட்வான்ஸ் தொகை:
இந்நிலையில் நேற்று வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 42 லட்சத்தை கொடுக்க போவதாகவும் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவரிடம் வீடு வாங்குவதற்கான பணம் கிடையாது.
பெண் வீட்டாரிடம் பணம் பறிக்க திட்டம்:
அந்த பணத்தை பறிபோனதாக நாடகமாடி பெண் வீட்டாரிடம் இருந்து வாங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்திலே குட்டு வெளிப்பட்டது" என்றனர். போலீசார் அசோகனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.