பிரதமர் பதவிக்கு தகுதியானவர்- "இந்தியாவின் பராக் ஒபாமா" மாயாவதி!!
இந்தியாவின் பராக் ஒபாமா என்று மாயாவதியை அமெரிக்கா வார இதழ் ஒன்று புகழாரம் சூட்டியிருந்தது.
டெல்லி: பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மாயாவதி என்று அமெரிக்காவின் வார இதழ் ஒன்று மகுடம் சூட்டியது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உள்ள மாயாவதி கடந்த 1956-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பிறந்தவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் அச்சமூக மக்களுக்காக பாடுபட்டார்.
முதல் தலித் பெண் முதல்வராக திகழ்ந்தார். 4 முறை உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். இவர் முதல்வராக இருந்த காலத்தில் புத்தர், ரவிதாஸ், கபீர், நாராயணா குரு, சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், பெரியார், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷி ராம் ஆகியோரின் சிலைகளை திறந்துவைத்தார்.
மேலும் தன் கட்சியின் சின்னமான யானையின் சிலைகளை அவர் ஆங்காங்கே நிறுவியதால் சர்ச்சையில் சிக்கினார். கடந்த 2007-ஆம் ஆண்டு நியூஸ் வீக் என்ற அமெரிக்காவின் வார இதழ் ஒன்று மாயாவதியை இந்தியாவின் பராக் ஒபாமா என்றும் , பிரதமர் பதவியை வகிக்க தகுதியானவர் என்றும் புகழாரம் சூட்டியிருந்தது.
கடந்த 2008 உலகில் ஆற்றமிக்க 100 பெண்களில் மாயாவதிக்கு 59-ஆவது இடத்தை அளித்தது போர்ப்ஸ் பத்திரிகை. தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள அவர் தலித் மீதான தாக்குதல் குறித்து பேச வாய்ப்பளிக்காவிட்டால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று இன்று தெரிவித்தார். அதன்படி அவர் ராஜினாமா செய்துவிட்டார்.