மடிந்துபோன மனிதநேயம்.. கெட்டுப்போன சாப்பாடு, ரத்த கறை படிந்த ஆடைகள் தானம்! தொண்டு நிறுவனம் கொதிப்பு
டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடை மனிதாபிமானமற்ற முறையில் இருப்பதாக அந்த நிறுவனம் பேஸ்புக்கில் காரமாக பதிவு செய்துள்ளது. இப்படிப்பட்டவர்கள் பெயர் விவரங்களை வெளியிட்டுவிடுவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நகரங்களிலும் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம், 'கூஞ்ச்'. ஊரக மேம்பாடு மற்றும் குடிசைபகுதி வளர்ச்சிக்காக அந்த அமைப்பு பாடுபட்டுவருகிறது.
கிழிசல், கறைகள்
இதற்காக உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை அந்த அமைப்பு சேகரிப்பது வழக்கம். ஆனால், என்.ஜி.ஓ அமைப்பை, ஏதோ குப்பைகள் கொட்டும் இடம்போல நினைத்த 'கனவான்கள்' பலர், தங்களிடமிருந்த கெட்டுப்போன சாப்பாடுகளையும், கிழிந்த மற்றும் ரத்தக்கறை உள்ளிட்ட கறை நிறைந்த ஆடைகளையும் அந்த அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பேஸ்புக்கில் காட்டம்
இதையெல்லாம் பிரித்து பார்த்த என்.ஜி.ஓ நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தங்கள் பேஸ்புக் பதிவில் இப்படி பதிவிட்டுள்ளனர்: நாங்கள் ஒரு செய்தியை சத்தமாகவும், தெளிவாகவும் சொல்ல ஆசைப்படுகிறோம்.. இது ஒரு குப்பை கிடங்கு கிடையாது. அழுகி போன பொருட்கள் முதல், ரத்தக்கறை படிந்த உள்ளாடைவரை அனுப்பியுள்ளீர்கள். இதை யாரும் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள்.
பெயர் வெளியிடுவோம்
எங்கள் குழுவை அவமரியாதை செய்யும் போக்கை நிறுத்திக்கொள்ளுங்கள். மனிதாபிமானத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் நாம் என்ற செய்தியை உலகுக்கு அளியுங்கள். இவ்வாறு பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட அழுகல் மற்றும் கிழிசலான பொருட்களின் போட்டோக்களும் பகிரப்பட்டுள்ளன. மேலும், இதேநிலை நீடித்தால், தானம் செய்தோர் பெயர் விவரம் வெளியிடப்பட்டு அசிங்கப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டை கூடவா..?
இதுகுறித்து அந்த என்.ஜி.ஓவை சேர்ந்த சிலரிடம் பேசியபோது, "ஆடையில் கறை இருப்பதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் கெட்டுப்போன பதார்த்தங்களை தானமாக தருவதால் என்ன லாபம்? பசியில் உள்ளோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டால் அவர்கள் உடல்நிலை என்னவாகும் என்று நினைக்க வேண்டாமா?" என்று ஆதங்கம் வெளிப்படுத்தினர்.