டெல்லியில் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கு ஒரு வாரம் தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு 1 வார காலம் தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமானப் பணிகளுக்கு ஒருவாரம் அதிரடி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
டெல்லியில் காற்று மாசு அளவுக்கு மிக அதிகளவு அதிகரித்துள்ளது ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து டெல்லி மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது; கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லியில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் 1 வாரம் தடை விதித்துள்ளது. அத்துடன் விவசாய கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்த பஞ்சாப் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? விவசாய கழிவுகளை எரிக்காமல் இருக்க நீங்கள் விவசாயிகளுக்கு ரூ1,000 உதவி தொகை கொடுத்தால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியது.
முன்னதாக நேற்று பசுமை தீர்ப்பாய விசாரணையில், காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளாத டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு என்ன செய்தது? சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? ஹெலிகாப்டர் மூலம் செயற்கை மழை பொழிய செய்து தூசு பரவுவதை தடுக்க முடியாதா? அதிகாரிகள் பறப்பதற்கு மட்டும்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துவீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியது பசுமை தீர்ப்பாயம்.
மேலும் வயல்வெளியில் விவசாயக் கழிவுகளை எரிப்போர் மீது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.