ரவிசங்கர் குருஜியின் கலாச்சார விழாவால் யமுனை நதிக்கு ஆபத்து.. என்.ஜி.ஓக்கள் போர்க்கொடி
டெல்லி: வரும் 11ம் தேதி முதல் மூன்று நாட்கள், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரிலான நிகழ்ச்சியை, யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 155 நாடுகளை சேர்ந்த, பொது மக்கள் சுமார், 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்ச்சிக்காக யமுனா நிதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலங்களை அமைக்கும் பணியில் சுமார் 120 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பாலம் அமைக்கும் பணிக்காக இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழும் கலை அமைப்பு கட்டணம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நிகழ்ச்சிக்காக 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் மேடைகள், சிறிய அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மிதக்கும் பாலம் போன்றவை தயார் செய்யப்பட்டு வருவதாலும், நதி நீரை தூய்மை செய்வதற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாலும் நிகழ்ச்சிக்கு எதிராக, போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.
சர்ச்சை எழுந்ததையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், பல என்.ஜி.ஓக்கள் புகார் வழங்கியுள்ளதால், தீர்ப்பாயம் என்ன முடிவை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரவிசங்கர் கூறுகையில், உண்மையை சொல்ல வேண்டுமானால், சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசிய பகுதியை சுத்தம் செய்து, 35 லட்சம் பேர் கூடும் பகுதியாக செழுமைப்படுத்தியுள்ளது வாழும் கலை அமைப்பு. நதிக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications