வடகிழக்கு தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை... தாய்லாந்து ஆயுத வியாபாரி இந்தியாவுக்கு நாடு கடத்தல்!!
டெல்லி: வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தது தொடர்பாக தாய்லாந்தில் இருந்து ஆயுத வியாபாரி வில்லி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள்.
நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் மியான்மர் நாட்டில் நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்பதற்கான ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற என்.எஸ்.சி.என். இந்த அமைப்பு கப்லாங் மற்றும் ஐசக் மூய்வா ஆகியோர் தலைமையில் தனித்தனியாக செயல்படுகிறது.
இதில் ஐசக் மூய்வா தலைமையிலான என்.எஸ்.சி.என்., மத்திய அரசுடன் அண்மையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கப்லாங் பிரிவினர் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தி 18 வீரர்களை கொலை செய்ததால் சட்டவிரோத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதக் கடத்தலில் மூய்வா பிரிவினர் சிக்கிய வழக்கில் தாய்லாந்தை சேர்ந்த ஆயுத வியாபாரி வில்லி இந்தியாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த ஆயுதக் கடத்தல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மூய்வா பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர் அந்தோணி சிம்ராயை 2011ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்த தாய்லாந்தைச் சேர்ந்த வில்லி என்ற ஆயுத வியாபாரியிடம் இருந்து ரூ8 கோடி மதிப்பிலான ஆயுதங்களைப் பெறுவதற்கு பேரம் பேசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் ரூ5 கோடி முதல் கட்டமாகவும் கொடுக்கப்பட்டதும் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருந்து வில்லியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தோணி சிம்ராய் சிறையில் அடைக்கப்பட்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 2011ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் தம்மை நாடு கடத்த கூடாது என வில்லி தாய்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் வில்லியின் மனுவை கடந்த நவம்பர் 4-ந் தேதியன்று தாய்லாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வில்லியை இந்தியாவுக்கு நாடு கடத்தியது தாய்லாந்து நீதிமன்றம்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட வில்லியை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள். இந்த விசாரணையின் போது எந்தெந்த வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்கள் ஆயுதங்களை எப்படியெல்லாம் பெற்றது என தெரியவரும்.