ஒரே ஆள்.. ஒரே இரவு.. விஜய் முதல்வராகும் கனவை மொத்தமா சிதைச்சி விட்டாரு.. டிடிவி தினகரன் சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முயன்ற தவெக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய செக் வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் நிலவி வந்த பெரும் பரபரப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதலமைச்சர் கனவு ஒரே இரவில் கலைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி அவர் முதல்வர் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடத்திய நள்ளிரவு செய்தியாளர் சந்திப்பும், ஆளுநரிடம் அவர் அளித்த புகாரும் விஜய்க்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?
நேற்று மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரைச் சந்தித்த விஜய், தனக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். மெஜாரிட்டி கணக்கைக் காட்டி ஆட்சியமைக்க அவர் தீவிரம் காட்டிய நிலையில், அந்த ஆதரவு கடிதங்களில் சில முக்கிய ஓட்டைகள் இருந்தன. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் அதில் இடம்பெறவில்லை.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, அ.ம.மு.க-வின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் விஜய்யின் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
டிடிவி தினகரனின் நள்ளிரவு அதிரடி
மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அதிரடி புகார் அளித்தார். இது குறித்து நள்ளிரவில் ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்ட தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.
அவர் கூறுகையில், "எங்களிடம் இருப்பது ஒரே ஒரு எம்.எல்.ஏ தான். கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாது என்பதால், திட்டமிட்டே எங்கள் எம்.எல்.ஏ-வை குறிவைத்து அவர்கள் கடத்தியுள்ளனர். ஒரு போலி கடிதத்தை வைத்துக்கொண்டு ஆளுநர் எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும்?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
கையெழுத்து மோசடி புகார்?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுநரிடம் அளித்த ஆதரவு கடிதத்தில் எம்.எல்.ஏ காமராஜின் கையெழுத்து இருந்ததாகவும், ஆனால் அதன் அசல் பிரதியை (Original Copy) ஆளுநர் கேட்டபோது விஜய் தரப்பினர் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு நிழற்பட நகலை (Photocopy) வைத்துக்கொண்டு விஜய் தரப்பு ஆளுநரை ஏமாற்ற முயன்றதாகத் தினகரன் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நேரில் ஆஜரான காமராஜ்: விஜய்க்குச் சிக்கல்
இந்த பரபரப்பான சூழலில், ஆளுநர் மாளிகையிலிருந்து எம்.எல்.ஏ காமராஜுக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு சென்றது. "நீங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தீர்களா?" என்ற ஆளுநரின் கேள்விக்கு, "நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை, இதோ நேரில் வருகிறேன்" என்று கூறிவிட்டு காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.
ஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், "நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது விஜய்யின் மெஜாரிட்டி கணக்கை முழுமையாகச் சிதைத்தது.
"அராஜகத்தின் உச்சம்" - தினகரன் கடும் தாக்குதல்
செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு மோசடிகளில் ஈடுபடும் சக்திகள் கையில் தமிழகம் கிடைத்தால் மாநிலத்தின் கதி என்னவாகும்? இது போன்ற மோசடி சக்திகள் ஆட்சிக்கு வந்தால் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது. இது அராஜகத்தின் உச்சம்," என ஆவேசப்பட்டார்.
விஜய் தரப்பு 'குதிரை பேரம்' மற்றும் 'மோசடி'யை முன்னெடுப்பதாக எழுந்த இந்த குற்றச்சாட்டுகள், தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சியமைக்கும் முனைப்பில் இருந்த விஜய்க்கு, எம்.எல்.ஏ காமராஜின் வாக்குமூலம் பெரும் அடியாக விழுந்துள்ளது. டிடிவி தினகரனின் நள்ளிரவு பேட்டி விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது.












Click it and Unblock the Notifications