“மெகா செக்”.. கனடாவிலிருந்து சவால்விட்ட காலிஸ்தான் பயங்கரவாதி! பஞ்சாப் சொத்துக்களை முடக்கிய என்ஐஏ
பஞ்சாப்: கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் பஞ்சாப் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. முடக்கி இருக்கிறது.
கனடா நாட்டை சேர்ந்த காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்து இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இரு நாடுகள், தத்தமது நாடுகளில் இருந்து கனடா, இந்தியா தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டன. விசா நடைமுறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்தான் கனடாவில் உள்ள காலிஸ்தான் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இன்று காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை என்.ஐ.ஏ. முடக்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பன்னுவில் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
எஸ்.எஃப்.ஜே. எனப்படும் சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் இருந்து வருகிறார். கனடாவில் இருந்து செயல்பட்டு வரும் பன்னுவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 22 குற்ற வழக்குகள் உள்ளன. இவற்றில் 3 தேசதுரோக வழக்குகளாகும்.
கடந்த மே 6 ஆம் தேதி காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் லாஹூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜூன் 15 ஆம் தேதி காலிஸ்தான் தலைவரான அவ்தார் சிங் கண்டா பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஜூன் 18 ஆம் தேதி தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான காலிஸ்தான் டைகர் போன்ஸ் தலைவரும் கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார்.
இந்த மூவரின் மரணத்தை தொடர்ந்து குர்பத்வந்த் சிங் பன்னுவின் எஸ்.எஃப்.ஜே. காலிஸ்தான் அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தவும், ஜி20 மாநாட்டை சீர்குலைக்கவும் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் குர்பத்வந்த் சிங் பன்னு பேசுகையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்திய தூதர் வெர்மாதான் காரணம் என குற்றம்சாட்டினார்.
வரும் அக்டோபர் 29 ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேவில் காலிஸ்தான் வாக்கெடுப்பு 2 ஐ நடத்த வேண்டும் எனவும் பன்னு அறிவித்து இருந்தார். கொல்லப்பட்ட நிஜ்ஜார் இந்திய அரசின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்தோடு ஒரே மாதத்தில் 3 காலிஸ்தான் செயற்பாட்டாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக குர்பத்வந்த் சிங் பன்னு இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது சொத்துக்களை முடக்குவதாக அறிவித்து இருக்கிறது தேசிய புலனாய்வு முகமை.












Click it and Unblock the Notifications