டெல்லியில் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் பறிமுதல்! நைஜீரிய நாட்டவர் கைது!!
டெல்லி: டெல்லியில் நைஜீரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று நைஜீரிய நாட்டவர் ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது உடமைகள் வேறொரு விமானத்தில் வந்துள்ளன.
பின்னர் விமான நிலையத்துக்கு வந்து உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஹோட்டலில் சேர்ப்பித்துவிடுமாறு விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து எஞ்சிய உடைமைகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு நைஜீரிய நாட்டவரிடம் உடைமைகளை கொடுத்து சோதனை நடத்தினர். அப்போது 8 கிலோ எடையுள்ள கோகைன் போதைப் பொருளை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ40 கோடி. இதையடுத்து அந்த நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.