"பனாமா பேப்பர்ஸ்” லிஸ்ட்டில் “ஆடியோ டேப்” புகழ் நீரா ராடியா பெயர்!
டெல்லி: இந்தியாவில் அடுத்த சர்ச்சையாகக் கிளம்பியுள்ள "பனாமா பேப்பர்ஸ்" விவகார லிஸ்ட்டில் ஏற்கனவே டெலிபோன் ஒட்டுக் கேட்பு விகாரத்தில் சிக்கிய நீரா ராடியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் நீரா ராடியா. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெயர் பத்திரிக்கைகளில் தினமும் இடம் பெற்று வந்தது. சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் இவர் ரகசியமாக தொலைபேசியில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

திமுகவைச் சேர்ந்த சிலருடனும் இவர் பேசியதாக தகவல்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
தற்போது பனாமா நாட்டில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் நீரா ராடியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த லிஸ்ட்டில் பிரபல நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, டிஎல்எஃப் உரிமையாளர் கே.பி.சிங் உள்பட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து பனாமா நாட்டில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பனாமா பேப்பர்ஸ் தகவலில் தெரியவந்தது.
இதை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மறுத்துள்ளனர். இவர்கள் தவிர உலக அளவில் இருந்து இந்த நாட்டில் பணம் பதுக்கியவர்களின் பட்டியலும் வெளியாகி இருந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உறவினர்கள், உதவியாளர்கள், சவுதி அரேபிய மன்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்று உள்ளன.
ஊழலை கடுமையாக எதிர்த்து வரும் நாடு சீனா. இந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினருக்கும் பனாமா நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் ஃபிபாவின் முக்கிய பிரதிநிதிகளும், ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சானும் வரி ஏய்ப்பு செய்து பனாமா நாட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications