பணம் தராமல் நழுவும் தமிழக அரசு.. வழக்கு போடுகிறது நிசான் நிறுவனம்! சர்வதேச அளவில் போகப்போகுது மானம்
Recommended Video

சென்னை: தமிழக அரசு வழங்க வேண்டிய 770 மில்லியன் டாலர் நிலுவை தொகையை கேட்டு சர்வதேச நடுவர் அமைப்பை நாடுகிறது ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிசான்.
போர்ட், ஹுண்டாய் போன்ற பல கார் நிறுவனங்கள் சென்னையை சுற்றிலும் ஒரு காலத்தில் அமைக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு தெற்காசியாவின் டெட்ராய்டு என்ற செல்லப் பெயர் கிடைத்தது.
அதேபோல 2008ல் நிசான் நிறுவனம், தனது சர்வதேச கார் தயாரிப்பு கூட்டு நிறுவனமான, பிரான்சின் ரெனால்ட்டுடன் இணைந்து, சென்னையில் கார் உற்பத்தி ஆலை அமைத்தது.

முதலீடு செய்த நிசான்
இப்படி கார் உற்பத்தி ஆலை அமைத்தால் வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழி அடிப்படையில் ஆலை அமைக்கப்பட்டது. இங்கு $946 மில்லியன் செலவில் முதலீடு மேற்கொண்டது நிசான். ஆண்டுக்கு 4,80,000 கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 2015ம் ஆண்டில் நிசானுக்கு ஊக்கத்தொகை கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அது தரப்படவில்லை.

கண்டுகொள்ளவில்லையாம்
இதுகுறித்து பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என நிசான் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அலுவலகத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து கடிதம் எழுதியுள்ள நிசான், தமிழக அரசு வாக்குறுதிப்படி சலுகைகள் தராததால் தங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

சர்வதேச நடுவர் அமைப்பில் புகார்
கடந்த ஆண்டு மார்ச் மாதம், மோடி அலுவலகத்தில் இதுகுறித்து முறையிட்டும், பணம் கிடைப்பதாக தெரியவில்லை என்ற நிலையில், சர்வதேச நடுவர் அமைப்பில் இதுகுறித்து புகார் அளிக்கப்போவதாக நிசான் பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம், $770 மில்லியன் பணம் நிலுவையில் உள்ளதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுடன் இணைந்து செயல்படுவது
இதனிடையே நடுவர் அமைப்புக்கு வெளியே வைத்து இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புவதாக தமிழக உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். மோடி அலுவலகம் இதுகுறித்த மீடியா கேள்விக்கு பதில் வழங்கவில்லை. அதேநேரம், நிசான்நிறுவனம் சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், விளக்கமாக இதை தெரிவிக்க மறுத்தாலும், இந்திய அரசுடன் இணைந்து இப்பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications