பெண்களே.. ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு மது ஆலைகளை அழித்து விடுங்கள்.. இவரும் முதல்வர்தான்!
பாட்னா: மது விலக்கா. அதெல்லாம் சாத்தியமே இல்லை.. பக்கத்து மாநிலங்களில் நிறுத்தினால் நாமும் நிறுத்தலாம் என்று தமிழக அரசு கூறி விட்டது. ஆனால் பீகார் மாநிலத்திலோ, மது ஆலைகளை அழியுங்கள் என்று மாநில முதல்வரே மக்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
படிக்காதவர்கள் நிறைந்த மாநிலம், வளர்ச்சி அடையாத மாநிலம், ஜாதி மோதல்கள் அதிகம் உள்ள மாநிலம் என்றெல்லாம் விமர்சிக்கப்படும் பீகார் மாநிலம் படு துணிச்சலாக மது விலக்கு முடிவை எடுத்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் நாட்டு மது விற்பனைக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பீகாரில் நாட்டு மது விற்பனைக்கான தடை ஏப்ரல் 1ம் தேதி முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் தொலைபேசி எண்கள் மக்களுக்கு வழங்கப்படும். சட்டவிரோதமாக யாராவது இந்த மதுவகைகளை விற்பனை செய்தால், அது குறித்து புகார் செய்ய இது உதவிகரமாக இருக்கும்.
ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகும் பீகாரில் நாட்டு மது தயாரிப்பதை கண்டறிந்தால் அந்த தொழிற்சாலைகளை அழிக்க பெண்கள் தயங்க வேண்டாம். இதுதொடர்பாக அரசு அமைக்கும் தகவல் மையத்தை பெண்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகள், ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசின் குறிப்பிட்ட சில அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். 6 மாதங்களுக்கு பிறகு அதுவும் முழுமையாக தடை செய்யப்படும் என்றார் நிதீஷ் குமார்.
கைதட்டி பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை இது...!












Click it and Unblock the Notifications