பாலியல் குற்றச்சாட்டு வழக்கு... ராம்நகர் கோர்ட்டில் ஆஜரானார் நித்தியானந்தா
முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது 'தான் ஒரு ஆண்மகன் இல்லை, 6 வயது குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது' என்று தெரிவித்தார் நித்தியானந்தா. எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க கோர்ட் முடிவு செய்தது.
இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு, ராம்நகர் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நவம்பர் 26ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும், இவ்வழக்கு விசாரணை வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராக நித்தியானந்தா மற்றும் அவரது சிஷ்யர்கள் வந்திருந்தனர். விசாரணை நடத்திய நீதிபதி மஞ்சுளா, அடுத்த மாதம் 11ம்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.