நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற முடியாது.. சிஐடி அறிக்கையில் பரபரப்பு தகவல்!
பெங்களூரு: உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது 'தான் ஒரு ஆண்மகன் இல்லை, 6 வயது குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது' என்று தெரிவித்தார் நித்தியானந்தா. எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க கோர்ட் முடிவு செய்தது.
இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவு, ராம்நகர் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையிலுள்ள சில அம்சங்கள் கன்னட தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு கசிந்துள்ளன. கன்னட மீடியாக்கள் கூறும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் எந்த அளவுக்கு உள்ளது, தடையின்றி ரத்தம் செல்கிறதா என்பதை அறிய நடத்த வேண்டிய டோப்ளர் சோதனைக்கு (எழுச்சி ஊசி) நித்தியானந்தா ஒத்துழைக்கவில்லை. எனவே அந்த சோதனை நடத்தப்படவில்லை.
- பெங்களூரு மடிவாளாவில் குரல் பரிசோதனைக்கு நித்தியானந்தாவை உட்படுத்தினோம். அந்த குரல் மாதிரி பதிவு மைசூரிலுள்ள 'ஸ்பீக் அண்ட் ஹியரிங்' மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு, இதை கண்டுபிடிக்க தேவையான சாப்ட்வேர் இல்லை, நிபுணர்கள் இல்லை. தமிழ் பேசத்தெரிந்த 10 பேர் வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே கோர்ட் அனுமதியுடன் குரல் மாதிரி குஜராத்திலுள்ள சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் இன்னும் வரவில்லை.
- டாக்டர்கள் நடத்திய சோதனையின்போது நித்தியான்தாவின் வயதுக்கு தக்கபடி அந்தரங்க உடல் உறுப்புகள் வளர்ச்சியடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.
- நித்தியானந்தாவின் உடலில் செக்சுவல் ஹார்மோன்கள் சரியான அளவில் உள்ளன. அவர் பாலுறவில் ஈடுபட முடியாது என்ற வாதத்திற்கு வலு சேர்க்க எந்த ஆதாரமும் கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளது.
இருப்பினும், குரல் சோதனை ரிசல்ட் வராதது, எழுச்சி ஊசி போட நித்தியானந்தா அனுமதிக்காதது போன்றவை வழக்கில் போலீசாருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாலுறவில் ஈடுபட முடியாது என்று கூற முடியாது என்று ரிப்போர்ட்டில் உள்ளதே தவிர, அவர் பாலுறவில் ஈடுபட தகுதியானவர் என்று நெத்தியடியாக அறிக்கை கூறவில்லை. இவையெல்லாம் நித்தியானந்தாவுக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
எனவே மீண்டும் ஒருமுறை நித்தியானந்தாவுக்கு சோதனை நடத்த கோர்ட் உத்தரவிடுமா, அல்லது இந்த அறிக்கை அடிப்படையில் வழக்கு நடைபெறுமா என்பதை பொறுந்திருத்துதான் பார்க்க வேண்டும்.