சுஷ்மாவை சமாதானப்படுத்திய புதிய பதவி: பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகிறார்?
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அத்வானி அடம் பிடித்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நிதின் கத்காரியை அனுப்பி வைத்தது. அவரும் டெல்லியில் அத்வானியை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மோடியை எதிர்த்த பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜையும் நிதின் கத்காரி சந்தித்துப் பேசினார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால், குஜராத் முதல்வர் பதவி, பாஜக பிரசாரக் குழுத் தலைவர் பதவியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஸ்வராஜ் வலியுறுத்தினார்.
இதையடுத்து அவருக்கு மோடி வசம் உள்ள பாஜகவின் லோக்சபா பிரசாரக் குழு தலைவர் பொறுப்பு தரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த உறுதிமொழியைத் தொடர்ந்தே மோடியை பிரதமர் வேட்பாளராக சுஷ்மா ஏற்றார் என்றும் தெரிகிறது.
அப்படி சுஷ்மா ஸ்வராஜை லோக்சபா பிரசாரக் குழு தலைவராக நியமித்தால் அவர்தான் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை மேற்கொள்வார்.