பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசு! நள்ளிரவில் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார்
பாட்னா: பாஜகவோடு இணைந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. நள்ளிரவில் ஆளுநரிடம் ஆட்சியமைக்க அனுமதி கோரினார் நிதிஷ்குமார்.
பீகார் சட்டசபையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58 உறுப்பினர்கள் பலம் உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 எம்எல்ஏக்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு 80 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரசின் பலம் 27.
காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம் இணைந்து பீகாரில் பிரமாண்ட கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.

ராஜினாமா
இந்த நிலையில், ஊழல் புகார் குறித்து லாலு மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி பதிலளிக்கவில்லை என்பதை காரணமாக வைத்து முதல்வர் பதவியை நிதிஷ்குமார் புதன்கிழமை மாலை ராஜினாமா செய்துள்ளார்.

திட்டமிட்டது
இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என கூறப்படுகிறது. தனது பழைய கூட்டாளி பாஜகவுடன் மீண்டும் இணைய நிதிஷ்குமார் போட்ட நாடகமே இந்த ராஜினாமா என கூறப்படுகிறது. லாலு கட்சியோடு இணைந்து ஆட்சி நடத்துவது முட்படுக்கையில் இருப்பதை போல உணர்ந்த நிதீஷ்குமார், அதை கட் செய்ய திட்டமிட்டார். இதற்கு பாஜகவும் பச்சைக்கொடி காட்டியது.

வரவேற்ற மோடி
இந்த நிலையில்,நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை மோடி வரவேற்று டிவிட் செய்துள்ளார். எனவே திட்டமிட்டபடி பாஜக ஆதரவோடு நிதிஷ் மீண்டும் முதல்வராக முதல் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி, கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு நேற்று இரவு 10 மணியளவில் நிதிஷ் வீட்டுக்கு பாஜக எம்எல்ஏக்கள் சென்றனர். தங்கள் ஆதரவை அவர்கள் தெரிவித்தனர். பீகார் ஆளுநருக்கும் ஆதரவு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பெரும்பான்மை பலம்
இதனிடையே நிதிஷ் நள்ளிரவு 12 மணியளவில் ராஜ்பவன் சென்றார். பாஜக மாநில தலைவர் சுஷில் மோடியும் உடனிருந்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் ஆட்சியமைக்க அனுமதி கேட்டார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களே போதும் எனும் நிலையில், பாஜக கூட்டணி-நிதிஷ் கட்சி கூட்டணியின் பலம் 129ஆக உள்ளதால் அவர்களுக்கே ஆட்சியமைக்க கவர்னர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications